பிறவினை (இலக்கணம்)
பிறவினை என்பது தான் செய்யாமல் பிறர் அல்லது பிறவற்றின் துணையுடன் செய்யும் வினை வடிவம். எடுத்துக்காட்டாக செய் என்பது வினை. செய்வி என்பது பிறரால் செய்வதைக் குறிக்கும் வினை. பிறவினை விகுதிகளாக எட்டு இகர உகர உயிர்மெய் எழுத்துகள் பயன்படுகின்றன. அவையாவன: வி, பி, கு, சு, டு, து, பு, று. இவற்றில் ஆறு வல்லின உகரங்களும் பயன்படுகின்றன என்பது நினைவில் கொள்ளத்தக்கன. இவ்வல்லினங்கள் ஒற்று மிகுந்து வருதல் நோக்கத்தக்கது. உதட்டொலி இகரங்களாகிய வி, பி ஆகிய இரண்டும் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்:
- வி : செய் -> செய்வி (செய்வித்தான்), வா -> வருவி (வருவித்தான்), எழுது ->எழுதுவி (எழுதுவித்தான்), வரை -> வரைவி
- பி: நட -> நடப்பி (நடப்பித்தான்), அழி -> அழிப்பி (அழிப்பித்தான்), எடு -> எடுப்பி (எடுப்பித்தான்), காண் -> காண்பி (காண்பித்தான்)
- கு: போ - > போக்கு (போக்கினான்), வதங்கு -> வதக்கு , மடங்கு -> மடக்கு, உருகு -> உருக்கு (வல்லினம் மிகுத்து வருதல் பிறவினை உணர்த்துகின்றது)
- சு: பாய் - > பாய்ச்சு (பாய்ச்சினான்), காய் (காய்தல்) -> காய்ச்சு (காய்ச்சுதல்)
- டு: உருள் (உருளுதல்) -> உருட்டு (உருட்டுதல்), மிரள் (மிரளுதல்) -> மிரட்டு (மிரட்டுதல்)
- து: நட - > நடத்து, உணர் -> உணர்த்து,
- பு: எழு - > எழுப்பு , உசும்பு -> உசுப்பு
- று: பயில் - > பயிற்று, துயில் - > துயிற்று, ஏறு - > ஏற்று, தேறு - > தேற்று