அரிராஜன் (Hariraja) (ஆட்சி சுமார் 1193-1194 பொ.ச. ) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். கோரி படையெடுப்பாளர்கள் இவரது தந்தை மூன்றாம் பிருத்திவிராசனை தோற்கடித்து கொன்றனர். அப்போது உரிய வயதை அடையாமல் இருந்த நான்காம் கோவிந்தராசன் சகமான இராச்சியத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். கோரி ஆட்சியை ஏற்றுக்கொண்டதற்காக கோவிந்தராசனை அரிராஜா பதவி நீக்கம் செய்தார். கிபி 1194 இல் கோரிகளால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு, அரிராஜா தனது மூதாதையர் இராச்சியத்தின் ஒரு பகுதியை (இன்றைய ராஜஸ்தான் ) சிறிது காலத்திற்கு ஆட்சி செய்தார்.

அரிராஜன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1193-1194 பொ.ச.
முன்னையவர்நான்காம் கோவிந்தராசன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைசோமேசுவரர்
தாய்கற்பூரதேவி

ஆட்சி

அரிராஜன் சகமான மன்னர் சோமேசுவரருக்கும் ராணி கற்பூரதேவிக்கும் மகனாவார். இவரும் இவரது அண்ணன் மூன்றாம் பிருத்விராசனும் குசராத்தில் சோலாங்கி அரண்மனையில் உறவினர்களால் வளர்க்கப்பட்டார். [1] சோமேசுவரனின் மரணத்திற்குப் பிறகு இவர் சிம்மாசனத்தில் ஏறினார். ஆனால் இவரது ஆட்சி கிபி 1192 இல் கோரிகளின் படையெடுப்பால் முடிவடைந்தது. கோரிகள் இவரது மகன் கோவிந்தராசனை ஆட்சியாளராக நியமித்தனர். [1]

அரிராஜா சகமான தலைநகர் அஜ்மீரில் கோரி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். கோவிந்தராசனை ரந்தம்பூர் கோட்டையில் தஞ்சம் அடையச் செய்தார். இதைப் பற்றி கேள்விப்பட்ட கோரியின் ஆளுநர் குத்புத்தீன் ஐபக் தில்லியில் இருந்து ரந்தம்பூருக்கு விரைந்தார். [2] கோரி இராணுவத்தை தோற்கடிக்க முடியாத அரிராஜா பின்வாங்கினார். [3]

கோரிகள் ககாடவாலர்கள் போன்ற பிற இந்து வம்சங்களுடன் சண்டையிடுவதில் மும்முரமாக இருந்தபோது, அரிராஜா மீண்டும் பொ.ச.1193 -இல் அஜ்மீரை ஆக்கிரமித்து அஜ்மீரை மீண்டும் கைப்பற்றினார். மேலும் பிருத்விராசனின் முன்னாள் தளபதி கந்தாவின் ஆதரவுடன் புதிய சகமான மன்னரானார். [4] அதைத் தொடர்ந்து, தில்லியைக் கைப்பற்ற ஜதிரா (இசுலாமியக் குறிப்பில் ஜிஹ்தார் அல்லது ஜித்தார் என்று அழைக்கப்படுகிறார்) தலைமையிலான படையை அரிராஜா அனுப்பினார். இருப்பினும், இந்த படை ஒரு பெரிய கோரி இராணுவத்திற்கு பயந்து பின்வாங்க வேண்டியிருந்தது. ஜதிராவின் படை தில்லியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அரிராஜா அஜ்மீரிலிருந்து மற்றொரு படையுடன் புறப்பட்டார். தொடர்ந்து நடந்த போரில் சகமான படைகளை கோரிகள் தோற்கடித்தனர். [5]

16-ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றாசிரியர் பெரிஷ்தாவின் கூற்றுப்படி, இந்த போரில் அரிராஜனும் ஜத்ராவும் கொல்லப்பட்டனர். இருப்பினும், 13 ஆம் நூற்றாண்டின் ஆதாரமான தாஜ்-உல்-மாசிர், ஜத்ரா "ஒரு நெருப்பின் தீப்பிழம்புகளில் தன்னை தியாகம் செய்தார்" என்று கூறுகிறது. சைன அறிஞரான நயசந்திர சூரியின் ஹம்மிர மகாகாவியம், அரிராஜா மீண்டும் அஜ்மீருக்கு திரும்ப வேண்டியிருந்தது என்றும், கோரிகளுக்கு எதிராக தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று அவர் தீர்மானித்து, தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறுகிறது. [6] [7]

பொ.ச.1194 தேதியிட்ட தந்தோட்டி கல்வெட்டு மூலம் அரிராஜனின் இராணியாக பிரதாபாதேவி என்பார் அறியப்படுகிறார்.[8]

சான்றுகள்

உசாத்துணை

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. ISBN 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. கணினி நூலகம் 11038728.
"https://tamilar.wiki/w/index.php?title=அரிராஜன்&oldid=259882" இலிருந்து மீள்விக்கப்பட்டது