ஆம்பல் (தாவரம்)
| ஆம்பல் | |
|---|---|
| படிமம்:Nymphaea pubescens JNTBGRI.jpg | |
| water lily (Nymphaea pubescens) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Nymphaeaceae |
| பேரினம்: | |
| இனம்: | N. pubescens
|
| இருசொற் பெயரீடு | |
| Nymphaea pubescens Willd. | |
| வேறு பெயர்கள் | |
|
Nymphaea rubra Roxb. ex Andrews | |
ஆம்பல் (Nymphaea pubescens, hairy water lily அல்லது pink water-lily) என்பது ஒரு வகை அல்லி மலர் ஆகும்.
பரவல்
ஆம்பலானது மித மற்றும் வெப்பமண்டல ஆசியாவின் வங்காளதேசம், இந்தியா, இலங்கை, யுன்னான், தைவான், பிலிப்பீன்சு, கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளில் ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் பொதுவாக காணப்படுகிறது. இது வங்கதேசத்தின் தேசிய மலர் ஆகும்.
இது வடகிழக்கு ஆத்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினிவிலும் காணப்படுகிறது.[1]
ஆம்பலானது வளர்ப்புத் தாவரமாகவும், காட்டுத் தாவரமாகவும் உள்ளது. இது அமிலத் தன்மை அற்ற நீரையே விரும்புகிறது. மேலும் இது 15 °C க்கும் குறைவான வெப்பநிலையை பொறுத்துக்கொள்ளாது.
விளக்கம்
ஆம்பல் என்பது ஒரு நீர்வாழ் தாவரமாகும், இதன் வேர்த்தண்டுக்கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். முட்டை அல்லது வட்ட வடிவினதாகிய இவ்விலையின் அடியில் நீண்ட பிளவு ஒன்றுண்டு. இப்பிளவு இலை விளிம்பிலிருந்து இலைக்காம்பு வரை நீண்டிருக்கும். இலையின் நடுவில் இதன் இலைக்காம்பு இணைந்திருக்கும். இக்காம்பு மிக நீள மானது. நீரளவிற்கு நீண்டு கொடுக்கும் இயல்பு இக்காம்பிற்கு உண்டு. குளங்குட்டைகளில் திடீரென நீர் நிரம்பி விடுமாயின், இவ்வியல்பினால் இலைக்காம்பு ஒரிரு நாள்களில் நீண்டு கொடுத்து இலையை நீர்ப்பரப்பின்மேல் நிலைக்கச் செய்யும். இவ்வியல்பு இதன் பூக்காம்பிற்கும் உண்டு. இலையின் கனுக்குருத்து வளர்ந்து பூவாகுமெனினும், இலைக்காம்பிற்கும், பூக்காம்பிற்கும் உள்ளமைப்பில் ஒரே ஒரு வேறுபாடு காணப்படும். இலைக்காம்பில் இரண்டு பெரிய துளைகள் நடுவில் இருக்கின்றன. பூக்காம்பில் ஐந்து பெருந்துளைகள் நடுவில் அமைந்துள்ளன. இத்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
இதன் இலைகள் தண்ணீர் மீது வட்டமாகவும், இதய வடிவிலானவையாக 15–26 (–50) செ.மீ அளவுள்ளவையாக இருக்கும். வெளிவரும் சில இலைகளின் தண்டுகள் தாமரையைப் போன்று தண்ணீருக்கு சற்று மேலே சற்று உயர்ந்து இலைகளை சுமக்கின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மேற்பரப்பில் மிதக்கின்றன.
ஆம்பலானது நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளால் வணிகமயமாக்கப்படுகிறது. இந்த இனத்தாவரத்தின் நீருக்கடியில் உள்ள இலைகள் அழகிய தோற்றத்தை அளிக்கின்றன. இது நீர்வாழ் உயிரி காட்சியகத்தாரால் விரும்பப்டுகிறது. அவர்கள் இதை முழுவதுமாக நீர்வாழ் தாவரமாக வைத்திருக்க இவற்றின் மிதக்கும் இலைகளை நீக்குகின்றனர்.[2]
இந்த மலர்கள் மிகவும் பெரியவை. இவை முழுமையாக மலரும்போது விட்டமானது 15 செ.மீ. இருக்கும். இவை பகலில் குவிந்து மூடி, இரவில் அகலமாக மலர்கின்றன. இவை கலப்பினத்தைப் பொறுத்து இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை என நிறத்தால் வேறுபடுகின்றன.
பெயரும் வகைகளும்
ஆம்பல் மலரானது ஷாப்ளா என வங்காள மொழியிலும், கோகா என இந்தியிலும் குமுதம் என சமஸ்கிருத்த்திலும் அழைக்கப்படுகிறது.[3] இந்த தாவரத்தின் இலைகளின் அடிப்பகுதியியல் சரியாக புலப்படாத அல்லது மெல்லிய ரோமக்கால்களைக் கொண்டிருக்கும். அதைபோல தண்டுகளும் மெல்லிய ரோமக்கால்களைக் கொண்டிருக்கும். இது தண்ணீருக்கு மேலே இருந்து தாவரத்தைப் பார்க்கும்போது வெளிப்படையாக தெரியாது.
ஆம்பலானது பல இயற்கை கலப்பினங்களுடன், செயற்கையாகயாக ஆக்கப்பட்ட கலப்பினல்களுடன் வளர்க்கப்பட்ட சில வகைகளைக் கொண்டுள்ளது.
ஆம்பலானது பல்வேறு சொற்களில் அறியப்படுகிறது, அவற்றில் மிகவும் பொதுவானது ரெட் வாட்டர் லில்லி என்ற வணிகப் பெயரில் அறியப்படும் செவ்வல்லி ஆகும், இது பெரும்பாலும் ஊதா நிற இலைகளையும் கொண்டுள்ளது.
தமிழிலக்கியங்களில் ஆம்பல்
"ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்" என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 62). இவ்வடியில் பயிலப்படும் 'ஆம்பல்' என்பதற்கு 'ஆம்பற்பூ' என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். 'ஆம்பல்' என்பது 'அல்லி', 'குமுதம்' என வழங்கும். ஆம்பல் வகையில் தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக் காம்பலும் (செவ்வல்லி) உள்ளன. பொதுவாக ஆம்பல் என்புழி. சங்க இலக்கியங்கள் வெள்ளாம்பலைக் குறிக்கின்றன.[4]
ஆம்பற் கொடியின் வேர்த்தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர் பெறுவர் என்ப:
"யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேனாறு ஆம்பற் கிழங்கொடு பெறுஉம்" (புறநா. 176 : 4-5)
ஆம்பல் பற்றிச் சங்கப் பாடல்கள் தரும் விளக்கங்களில் குறிப்பிடத்தக்க சில விளக்கங்கள் மட்டும் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன:
- நெய்தல், குவளை, ஆம்பல் ஆகியவை வெவ்வேறு பூக்கள்.[5]
- குவளை - மணமுள்ள மலர்
- ஆம்பல் - மணமில்லா மலர்
- இரண்டும் குளத்தில் பூக்கும் [6]
- கோட்டி, ஆம்பல், நெய்தல் ஆகியவை வெங்ஙேறு பூக்கள்.[7]
- ஆம்பல் மெல்லிய இலைகளை உடையது.[8]
- உள்ளே துளை கொண்ட ஆம்பல் கொடியில் குழல் என்னும் இசைக்கருவி செய்துகொள்வர்.[9]
- ஆம்பல் கொடி உள்ளே துளை கொண்டது.[10]
- கூம்பு நிற்பது போல ஆம்பல் பூக்கும்.[11]
- பருமனான கால்களில் ஆம்பல் பூக்கும்.[12]
- காற்று வீசிம்போது விரியும் வெள்ளை-ஆம்பல் பூ வெண்காக்கை கொட்டாவி விடுவது போல இருக்கும்.[13]
- வயலில் பூக்கும் ஆம்பல் தழையை களைந்து சேற்றில் அழுத்துவர்.[14]
- ஆம்பல் செடிகளைக் களை எடுப்பவர் நீரில் நின்றாலும் அந்த நீரை உண்ணமுடியாமல் வேறு நீரைப் பருக விரும்புவர்.[15]
- ஆம்பல் குளத்திலும் பூக்கும்.[16]
- கரும்புப் பாத்தியிலும் கூக்கும்.[17]
- அருவியிலும் பூக்கும்.[18]
- பல அடுக்குகளைக் கொண்டது.[19]
- செந்நிறத்திலும் பூக்கும்.[20]
- நிலவெளியில் மலரும்.[21]
- ஆம்பல் இலையில் பொங்கல் சோற்றைப் போட்டுச் சாட்டிவர்.[22]
- ஆம்பல் கொடியை வளையலாக அணிந்துகொள்வர்.[23]
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "Taxonomy". Archived from the original on 2015-09-24. Retrieved 2019-10-11.
- ↑ Nymphaea pubescens
- ↑ Names
- ↑ சங்க இலக்கியத் தாவரங்கள் பக்கம் 13, டாக்டர் கு. சீநிவாசன்
- ↑ நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் – பரிபாடல் 2-13
- ↑
- ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
- விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
- பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
- கருமங்கள் வேறு படும். நாலடியார் 236
- ↑ கொட்டியும் ஆம்பல்லும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு – ஔவையார் – மூதுரை 17
- ↑ மெல்லிலை அரி ஆம்பல் – மதுரைக்காஞ்சி 252
- ↑ ஆம்பல் அந் தீங்குழல் – குறிஞ்சிப்பாட்டு 222
- ↑ நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் – நற்ற்றிணை 6
- ↑ கூம்புநிலை அன்ன முகைய ஆம்பல் – நற்றிணை 280
- ↑ கணைக்கால் ஆம்பல் – நற்றிணை 230
- ↑ உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல், சிறு வெண்காக்கை ஆவித்து அன்ன – நற்றிணை 345
- ↑ வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற்றிணை 390
- ↑ ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு - குறுந்தொகை 178
- ↑ பொய்கை பூத்த புழல்கால் ஆம்பல் – ஐங்குறுநூறு 34
- ↑ கரும்பு நடு பாத்தி கலித்த ஆம்பல் – ஐங்குறுநூறு 65
- ↑ அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதிற்றுப்பத்து 62
- ↑ பல அடுக்கல் ஆம்பல் – பரிபாடல் 3-45
- ↑ செவ்வாய் ஆம்பல் – பரிபாடல் 8-116
- ↑ மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் – கலித்தொகை 72-6
- ↑ ஆம்பல் அகல் அமலை வெஞ்சோறு – அகம் 196
- ↑ ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் – புறம் 352
வெளி இணைப்புகள்
- Islam, Sirajul (2012). "National Emblem". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- பங்களாதேஷில் நிம்பேயா இனங்கள் குறித்த ஆய்வுகள்
- நிம்பேயா பெயர்களை வரிசைப்படுத்துகிறது பரணிடப்பட்டது 2012-09-16 at the வந்தவழி இயந்திரம்
- நிம்பேயா பப்ஸ்சென்ஸ் - படங்கள்
- சீனாவின் தாவரங்கள் 6: 116–118. 2001 - நிம்பேயா 睡莲