ஜி ஈ பி - 24
ஜி ஈ பி - 24 (GEB 24) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். கிச்சிலி சம்பாவிலிருந்து தனித்தேர்வு செய்யப்பட்ட இந்நெல் இரகம், அரசாங்க பொருளாதார தாவரவியலால் (Government Economic Botany) தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். எனவே இந்த நெல் வகைக்கு, GEB என பெயர்ப் பெற்றதாக கூறப்படுகிறது.மேலும் சோறு மற்றும் பிரியாணி வகைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன் தானியம், மெல்லியதாகவும், (சன்ன இரகம்) அரிசி வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.[1]
| ஜி ஈ பி - 24 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 135 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு சுமார் 1,525 கிலோ[1] |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
காலம்
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 135 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா பருவத்தில் புழுதி விதைப்பு மற்றும் நாற்று மூலமும் நடவு செய்யக்கூடிய இது, நாற்றங்கால் வயது 28 - 30 நாட்களாக உள்ளது.[1]
சாகுபடி
மணல் கலந்த களிமண் போன்ற நிலங்களில் பயிரிட ஏற்றதாக கூறப்படும் இந்த நெல் இரகத்தின் தண்டுப் பகுதிகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், பால்பிடித்தவுடன் பயிர் காய்ந்துவிடுவதாகவும், அதனால் மகசூலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கருதப்படுகிறது.[1]
மகசூல்
சராசரியாக 107.5 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 115.8 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த இரக நெற்கதிர்களின் நீளம், 22.4 - 26.2 சதம மீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 88 - 160 என கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 1,525 கிலோவாகவும் (21 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 900 (30 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
நெல்மணியின் இயல்பு
ஜி ஈ பி - 24 இன் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் கரும்பச்சையாகவும், முதிர்ச்சிப் பருவத்தில் வைக்கோல் நிறத்தில் காணப்படும்.[1]