டிமிடர்
டிமிடர் என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் செரெசு என்பவர் ஆவார்.[1]
| டிமிடர் | |
|---|---|
| படிமம்:Demeter Altemps Inv8546.jpg டிமிடரின் பளிங்குச் சிலை, உரோம் தேசிய அருங்காட்சியகம் | |
| வேறு பெயர்கள் | சிடோ, தீசுமோஃபோரசு |
| இடம் | ஒலிம்பசு மலைச்சிகரம் |
| துணை | இயாசியோன், சியுசு, ஓசனசு, கார்மனோர், பொசைடன் மற்றும் டிரிப்டோலெமுசு |
| பெற்றோர்கள் | குரோனசு மற்றும் ரியா |
| சகோதரன்/சகோதரி | எசுடியா, எரா, ஏடிசு, பொசைடன், சியுசு, சிரோன் |
| குழந்தைகள் | பெர்சிஃபோன், டெசுபோய்னா, ஏரியன், புளூட்டசு, ஃபைலோமிலசு, யூபுலியுசு, சிரைசோதீமிசு மற்றும் அம்ஃபிதியுசு |
| விழாக்கள் | தீசுமோஃபோரியா |
டிமிடர் மற்றும் பெர்சிஃபோன்
பெர்சிஃபோன் அழகில் மயங்கிய ஏடிசு அவரை பாதாள உலகிற்கு கடத்திச்சென்றான். இதனால் டிமிடர் மனமுடைந்தார். இதனால் பருவ நிலைகள் மாற்றமடைந்தன, உலக உயிர்களின் வளர்ச்சி நின்றது.[2] அழிவில் இருந்து உலகைக் காப்பாற்ற சியுசு ஏடிசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த எர்மெசு கடவுளைப் பாதாள உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டு விட்டதால் அவர் இனி நிரந்தரமாக பாதாளத்தில் இருக்க வேண்டும் என்று ஏடிசு கூறுகிறார். பிறகு ஒரு உடன்படிக்கை செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் மற்ற பருவ காலங்களில் தன் தாய் டிமிடருடன் வாழ்வதாகவும் வறட்சி நிலவும் கோடை காலத்தில் மட்டும் பாதாள உலகில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
டிமிடர் மற்றும் பொசைடன்
டிமிடர் மேல் பொசைடன் கடவுள் காமம் கொண்டார். இதனை அறிந்த டிமிடர் பெண் குதிரை வடிவமெடுத்து குதிரை மந்தையில் ஒளிந்து கொண்டார். ஆனால் பொசைடன் ஆண் குதிரை வடிவமெடுத்து டிமிடரை துரத்தி அவருடன் வலுக்கட்டாயமாக உறவாடினார். இதனால் டிமிடர் கோபமடைந்தார். இந்த நிலையில் டிமிடர் எரினைசு என அழைக்கப்படுகிறார். பிறகு லாடோன் நதியில் புனித நீராடியபோது டிமிடரின் கோபம் அடங்கியது. இந்த நிலையில் இவர் டிமிடர் லூசியா அல்லது நீராடிய டிமிடர் என்று அழைக்கப்படுகிறார்.[3] பொசைடன் மூலம் டிமிடருக்கு ஏரியன் என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது.