விந்தையர்

விந்தையர் என்பவர் தென்காசி பெரிய கோயிலில் ஜீவ சமாதி அடைந்த சித்தராவார்.
கதை
இவரைப் பற்றிய கதை தென்காசி பகுதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது.
இவரின் ஊர் விந்தன்கோட்டை ஆகும். இந்த விந்தன்கோட்டை முதலாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சியில் கட்டப்பட்டது.[1] கோட்டை கட்டப்பட்டவுடன் அதற்கான பாண்டிய அமைச்சர்களுக்கு (சில சமயம் பாண்டிய வேந்தனின் சகோதரர்கள் அல்லது நேரடி உறவினர்களே இவ்வூரின் அமைச்சராக இருப்பர்) குருவாக இருப்பதற்குச் சிலர் நியமிக்கப்பட்டனர். அந்த வம்சத்தில் வந்தவரே விந்தையர் ஆவார். இவர் முதுமை அடைந்ததும் அகத்தியர் மூலம் சித்து நிலை அடைந்து செண்பகப்பொழில் பகுதியில் தவம் செய்து வந்தார்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422 - 1463) தென்தமிழகப் பகுதிகளை ஆண்ட போது அவருக்கு தென்காசி பெரிய கோயிலை அகத்தியர் கூறும் நெறிமுறைப்படி கட்டுமாறு சிவன் கனவில் ஆணையிட்டார். அதன்படி பாண்டியன் அகத்தியரை வேண்ட அவர் தன் சீடர்களில் ஒருவனான விந்தையரிடம் பாண்டியனை அனுப்பினார். அவரின் ஆணைப்படியே இந்த கோயில் கட்டப்பட்டது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விந்தையரையே தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டான். சில காலம் கழித்து விந்தையர் சமாதி நிலை எய்த அவருக்குத் தென்காசி கோயிலிலேயே சமாதியும் கட்டுவித்தான். தன் குருவை எப்போதும் தரிசித்தபடி தென்காசி பெரிய கோயிலில் இருக்கும் விந்தையர் சமாதியின் முன் தனது சிற்பத்தையும் அமைத்துக் கொண்டான்.