ஓ' வேலி
ஓ’ வேலி (O’Valley) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் தேயிலை முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.
ஓ' வேலி பேரூராட்சி, கூடலூரிலிருந்து 14 கிமீ தொலைவிலும், நடுவட்டத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும், நெல்லியாளத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 21943 மக்கள்தொகையும் கொண்டது.[2][3] [4]