கண்ணனார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 06:26, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை குறுந்தொகை 107, 244.

பாடல் தரும் செய்தி

குறுந்தொகை 107

நீண்ட காலம் பிரிந்து பொருள் தேடிக்கொண்டு வந்த தலைவனும் தலைவியும் கூடியிருக்கும் இரவு அது. விடியற் காலத்தில் கோழி (சேவல்) கூவுகிறது. தலைவனைத் தழுவிக்கொண்டிருக்கும் தலைவிக்குக் கோழியின்மேல் கோபம் வருகிறது. சேவலைச் சபிக்கிறாள்.

வீட்டில் வளர்க்கும் பூனை வீட்டில் திரியும் எலியைப் பிடிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 'சேவலே! அந்தப் பூனைக்கு நீ இரை ஆகுக! - இது அவள் இடும் சாபம்.

தமிழ் மரபு

நாம் பூனைக்குட்டி என்கிறோம். இந்தப் பாடல் இதனைப் 'பிள்ளை வெருகு' என்கிறது.

குறுந்தொகை 244

கள்ளக் காதலன் கள்ளக் காதலியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். தோழி வெளியே வந்து சொல்கிறாள்.

'நீ கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது. அவள் புரண்டு புரண்டு படுக்கிறாள். அதை உணர்ந்த தாய் அவளைத் தட்டித் தட்டிக் கொடுக்கிறாள். அவள் என்ன செய்வாள்?

யானை போரின்போது பகலில் கோட்டைக் கதவுகளைக் குத்தும். நீயோ இரவில் எம் கதவுகளைத் தகர்க்க முயல்கிறாய். வேண்டாம். திருமணம் செய்துகொள் - என்கிறாள்.

உவமை

மயில் தன் இறகுத் தண்டுகள் முருங்குகாறும், பீலி சாயுமாறும் வலையில் மாட்டிக்கொண்டது போல் தலைவி தன் தாயின் காப்பு வலையில் சிக்கிக்கொண்டாள்.

பழக்கம்

மயிலை வலை போட்டுப் பிடிப்பார்கள்.

பழந்தமிழ்

  • ஓரி = மயிலிறகின் தண்டு
  • பீலி = மயிலிறகு
  • முருங்கல் = ஒடியாமல் நசுங்கி ஒடிதல் (மயிலிறகுப் தண்டை ஒடிக்கமுடியாது)
"https://tamilar.wiki/w/index.php?title=கண்ணனார்&oldid=312074" இலிருந்து மீள்விக்கப்பட்டது