அடிமை
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடிமை (Audio file "Ta-அடிமை.ogg" not found) எனப்படுகின்றார். இந்த நிலைமை அடிமைத்தனம் எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவரை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றார்.

ஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது.
ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பல நாடுகளிலும், மறைவாக அடிமைகளை வைத்து வேலை வாங்குவோர் இருக்கத்தான் செய்கின்றனர். உலகில் சுமார் 2.7 கோடி அடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவில் அடிமைமுறையின் வடிவம் சாதியாகும். அடிமைத்தனம் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு தொடர்ச்சியாக இன்றுவரை வரலாற்றில் நீடிக்கிறது எனச் சிலர் கருதுகின்றனர்.[1][2]