யாவே
யாவே (Yahweh) என்பது யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே என்பது இறைநாமம்/திருநாமம்[4].
| யாவே | |
|---|---|
இறக்கைகள் கொண்ட தேர்ச் சக்கரத்தின் மீது யாவே கடவுள்
[1][2], பாரசீகப் பேரரசு காலத்தில் கிமு 4ஆம் நூற்றாண்டில் தெற்கு போனீசியாவின் காசா நகரத்தில் வடிக்கப்பட்டது. | |
| எழுத்து முறை | 𐤉𐤄𐤅𐤄 |
| இடம் | எடோம் சினாய் |
| துணை | அசெரா (தற்காலிகமானது, காலத்தைச் சார்ந்தது) |
| பெற்றோர்கள் | எல் (தற்காலிகமானது, காலத்தைச் சார்ந்தது) |
| நூல்கள் | |
| சமயம் | கானான் இஸ்ரேல் இராச்சியம் & யூத இராச்சியம் [3] |
இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (The Being) அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும்[5]. (கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ இஸ்ரவேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)
எபிரேய மொழியில் "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" / "முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகின்றவர்" / முக்காலமும் கடந்தவர் என்று பொருள்படும்.
தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து சொல்லாகும். இதுவே ஆங்கிலத்தில் "YHWH" எனக் குறிக்கப்படுகிறது.
எபிரேய மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு அடோனை (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக "ஹஷெம்" (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் "ஏலோஹிம்" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது "யெஹோவி".
யெருசலேம் தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் குருக்களும், கோயில் தலைமை குருவும் (யோம் கிப்பூர் அல்லது கழுவாய் திருநாளின்போது) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.
விவிலியம்: ஒரே தேவனை/கடவுளைப் (யாவே) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது. யாவே பெயர் விவிலியத்தில் 7,000 முறை எழுதப்பட்டுள்ளது.
யெகோவாவின் சாட்சிகள் எனும் ஒரு சமயப்பிரிவு காலப்போக்கில் இப்பெயரில் உருவானது. பலரால் இச்சமயம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த கொடிய உலகம் இறைவனால் மீண்டும் சொர்க்கமாக மாற்றப்படும் என்று இவர்கள் நம்புக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ Edelman 1995, ப. 190, 193–194.
- ↑ Stavrakopoulou 2021, ப. 411–412, 742.
- ↑ Miller & Hayes 1986, ப. 109–110.
- ↑ யாத் 3:13,14
- ↑ இணைச்சட்டம் 3:6-16
வெளி இணைப்புகள்
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - (ஆங்கில மொழியில்)
- அருள்வாக்கு