ஹன்னோ (யானை)
ஹன்னோ (Hanno; சுமார் 1510 – 8 சூன் 1516) என்பது போர்த்துகல் மன்னர் முதலாம் மானுவேலால், திருத்தந்தை பத்தாம் லியோவுக்கு (பிறப்பு ஜியோவானி டி' மெடிசி) அவரது முடிசூட்டு விழாவின் போது பரிசளிக்கபட்ட ஒரு வெள்ளை யானை ஆகும். யானை என்பதை மலையாளத்தில் ஆன ( ആന ) என அழைப்பர். அதுவே இந்த யானைக்கான போர்த்துக்கேய உச்சரிப்பாக அன்னோன் மற்றும் ஹன்னோ என ஆனது. ஆசிய யானையான ஹன்னோ, 1514 இல் போர்த்துகேய தூதரான டிரிஸ்டாவ் டா குன்ஹாவுடன் உரோமுக்கு வந்து, விரைவில் போப்பின் விருப்பமான விலங்காக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலச்சிக்கலுக்கான சிகிச்சையின் போது தங்கம் கலந்த மலமிளக்கி பயன்படுத்தியதால் ஏற்பட்ட சிக்கல்களால் ஹனோ இறந்து போனது. [1]




பின்னணி
மன்னர் மானுவல் ஹன்னாவை கொச்சி அரசரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கலாம் அல்லது இந்தியாவில் இருந்த தன் வைஸ்ராயான அபோன்சோ டி அல்புகெர்க்கேயிடம் அதை விலைக்கு வாங்கச் சொல்லியிருக்கலாம். ஹன்னோ வெள்ளை நிறத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இது சுமார் நான்கு வயதாக இருந்தபோது, 1514 ஆம் ஆண்டு லிஸ்பனில் இருந்து உரோமுக்கு கப்பல் மூலம் வந்துசேர்ந்தது. முதலில் அங்கு பெல்வெடெர் முற்றத்தில் ஒரு அடைப்பில் வைக்கப்பட்டது. பின்னர் புனித பேதுரு பேராலயத்திற்கும் அப்போஸ்தலிக்க அரண்மனைக்கும் இடையில், போர்கோ சாண்ட்'ஏஞ்சலோவுக்கு (போர்கோ ரயோனில் உள்ள ஒரு சாலை) அருகில் வசதியாக கட்டப்பட்ட ஒரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. பாஸ்குவேல் மலாஸ்பினா எழுதியது:
| “ | பெல்வெடேர் தோட்டத்தில், மாபெரும் பாதிரியாருக்கு முன்பாக,
பயிற்சி பெற்ற யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. அது அத்தனை நேர்த்தியுடன் நடனமாடியது, ஒரு மனிதன்கூட அதைவிடச் சிறப்பாக ஆடியிருக்க முடியாது: பின்னர் அது தனது தும்பிக்கையைத் தூக்கி பிளிரி பெரும் சத்தத்தை எழுப்பியது, அந்த இடமே செவிடுபட்டுப் போனது: பிறகு அது தன் முன்னங்கால்களை மடக்கி நின்று, போப்பாண்டவருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் மரியாதை செய்தது. |
” |
ஹன்னோ போப்பாண்டவர் அவையில் மிகவும் அன்புக்குரியதாக ஆனது. ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள், விழாக்களில் இடம்பெற்றது.[2] உரோமுக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென நோய்வாய்ப்பட்டது. ஹன்னாவிற்கு மலமிளக்கி மருந்து கொடுக்கப்பட்டது, மேலும் போப் அருகில் இருக்கையில், அந்த யானை 1516 ஆம் ஆண்டு சூன் 8 ஆம் நாள் இறந்தது. ஹானோ தனது ஏழாவது வயதில் கோர்டைல் டெல் பெல்வெடேரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஓவியர் ரபேல் ஒரு நினைவுச் சுவரோவியத்தை வடிவமைத்தார் (அது இப்போது இல்லை), மேலும் போப் அவர்களே அதன் கல்லறை வாசகத்தை எழுதினார்.
ஆக்ஸ்போர்டில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஹானோ உயிருடன் இருந்தபோது சிவப்புச் சுண்ணக்கட்டியால் வரையப்பட்ட நான்கு ஓவியங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "Hanno (elephant)".
- ↑ தங்கம், சா ஜெ முகில் (2025-12-31). "போப்பின் செல்ல யானை ஹன்னோ | வரலாறு முக்கியம் மக்களே! - 31". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-19.