கனா கண்டேன்
கனா கண்டேன் (Kana Kanden) 2005 ஆம் ஆண்டு கே. வி. ஆனந்த் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரித்விராஜ், விவேக் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் இந்தியில் முக்காபுலா என்றும், தெலுங்கில் கர்தவ்யம் என்றும், மலையாளத்தில் கனா கண்டேன் என்றும் மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஒளிப்பதிவாளரான கே. வி. ஆனந்த் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மலையாளத்தில் பிரபல நடிகரான பிரித்விராஜ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
| கனா கண்டேன் | |
|---|---|
| இயக்கம் | கே. வி. ஆனந்த் |
| தயாரிப்பு | பி. எல். தேனப்பன் |
| கதை | சுபா (வசனம்) |
| திரைக்கதை | கே. வி. ஆனந்த் |
| இசை | வித்தியாசாகர் |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் பிருத்விராஜ் கோபிகா விவேக் |
| ஒளிப்பதிவு | சௌந்தரராஜன் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | ராஜலட்சுமி பிலிம் இன்டர்நேசனல் |
| விநியோகம் | ராஜலட்சுமி பிலிம் இன்டர்நேசனல் |
| வெளியீடு | 13 மே 2005 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | 2 கோடி |
| மொத்த வருவாய் | 8 கோடி |
கதைச்சுருக்கம்
அர்ச்சனாவின் (கோபிகா) திருமணத்திற்குச் செல்லும் பாஸ்கர் (ஸ்ரீகாந்த்) எதிர்பாராவிதத்தில் அர்ச்சனாவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகிறது. பாஸ்கர் மற்றும் அர்ச்சனா திருமணத்திற்குப் பின் சிவராமகிருஷ்ணன் (விவேக்) வீட்டில் வசித்து வருகின்றனர். வேதியியல் துறையில் ஆராய்ச்சியாளராக இருக்கும் பாஸ்கர் கடல் நீரை குடிநீராக மாற்றும் தன் கண்டுபிடிப்பை அரசிடம் வழங்கி அதன் மூலம் மக்களின் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசை அணுகுகிறான். அரசாங்கம் அவனை உதாசீனப்படுத்துகிறது. எனவே கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையை தன் சுயமுயற்சியால் நிறுவ முயல்கிறான். மதன் (பிரித்விராஜ்) அர்ச்சனாவின் பள்ளித் தோழன். மிகப்பெரும் வணிக நிறுவனங்கள், பணக்காரர்களுக்கு பணம் கடனாக வழங்கும் தொழில் செய்யும் மதன் பாஸ்கருக்கு பணஉதவி செய்ய முன்வருகிறான். மதனிடமிருந்து பணம் வாங்கும் பாஸ்கர் அதற்கான ஒப்பந்தத்தை சரியாக படிக்காமல் கையொப்பமிடுகிறான். அந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மதன் பாஸ்கரிடம் தான் கொடுத்ததைவிட அதிக பணத்தை திருப்பிக் கேட்கிறான். அப்படிக் கொடுக்க முடியாவிட்டால் பாஸ்கரின் ஆராய்ச்சியைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு மிரட்டுகிறான். இதற்கு மறுக்கும் பாஸ்கரின் தொழிற்சாலையை தகர்க்க முயலும் மதனின் திட்டத்தை பாஸ்கர் முறியடிக்கிறான். மதனின் சதிவேலைகளை ஊடகங்கள் வழியாக அம்பலப்படுத்துகிறான். மதன் கைது செய்யப்படுகிறான். பாஸ்கரின் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கிறது.
நடிகர்கள்
- ஸ்ரீகாந்த் - பாஸ்கர்
- பிரித்விராஜ் - மதன்
- கோபிகா - அர்ச்சனா
- விவேக் - சிவராமகிருஷ்ணன்
- வனிதா கிருஷ்ணசந்திரன் - அர்ச்சனாவின் தாய்
- மயூரி - மதனின் மனைவி
- சிங்கமுத்து
- லின்டா அர்செனியோ
இசை
படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர். பாடல்களை எழுதியவர் வைரமுத்து.
| வ. எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
|---|---|---|---|
| 1 | காலை அரும்பி | வைரமுத்து | ஸ்ரீனிவாஸ், கல்யாணி |
| 2 | சின்ன சின்ன | கார்த்திக், சுனிதா சாரதி | |
| 3 | சின்ன பொண்ணு | சுனிதா சாரதி | |
| 4 | ஐயா ராமையா | உதித் நாராயணன் | |
| 5 | தாய் சொல்லும் | மாணிக்க விநாயகம் |