வடலூர்
வடலூர் (ஆங்கிலம்:Vadalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளது.
| வடலூர் | |
| அமைவிடம் | 11°33′19″N 79°33′18″E / 11.5552°N 79.5551°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| வட்டம் | குறிஞ்சிப்பாடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
39,514 (2011[update]) • 1,983/km2 (5,136/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 19.93 சதுர கிலோமீட்டர்கள் (7.70 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/vadalur |
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
16 அக்டோபர் 2021 அன்று வடலூர் பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
நகராட்சியின் அமைப்பு
19.93 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 136 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,736 வீடுகளும், 39,514 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். [7]
வடலூர் நகராட்சியின் பகுதிகள்
வடலூர் பேரூராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இந்த நகராட்சி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனம்
நகராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
போக்குவரத்து
சென்னை - கும்பகோணம் நெடுன்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோயில் திருப்பதி பெங்களூர், திருப்பூர், பழனி, ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது வடலூரில் தினசரி 1000 பேருந்துகள் வந்து செல்கின்றன
வடலூர்- நெய்வேலி சாலையில் பேருந்து பணிமனை ஒன்றும் உள்ளது
கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
கோயில்கள்
- இராமலிங்க அடிகளால் வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.
- பிடாரி அம்மன்
வடலூர் நகராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.
- கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
கல்வி நிறுவனங்கள்
- வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி நெய்வேலி சாலை வடலூர்
- அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.
- அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.
- எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.
- எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.
- தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்
- வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வடலூர்
சந்தை
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ வடலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vadalur Population Census 2011