இ. மகாதேவா

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 09:38, 24 சனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)

தேவன் - யாழ்ப்பாணம் (செப்டம்பர் 27, 1924 - திசம்பர் 8, 1982) என்ற பெயரில் எழுதி வந்த இளையப்பா மகாதேவா ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள், கட்டுரைகள் எனப் பலதும் எழுதி வந்தவர்.

தேவன் - யாழ்ப்பாணம்
பிறப்புஇளையப்பா மகாதேவா
(1924-09-27)27 செப்டம்பர் 1924
யாழ்ப்பாணம்
இறப்புDecember 8, 1982(1982-12-08) (aged 58)
யாழ்ப்பாணம்
இருப்பிடம்நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
பணியகம்யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஎழுத்தாளர், பேச்சாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
பரமேசுவரி (இ. 31 மார்ச் 2018)
பிள்ளைகள்5

இளமைக் காலமும், பணியும்

தேவன் யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தவர். இலண்டன் மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தியடைந்த தேவன் தனது 19வது அகவையில் உடுவில் மான்ஸ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.[1] பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று, உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பயிற்சியை முடித்த பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.[1] மனைவியின் பெயர் பரமேசுவரி, இசை ஆசிரியையாகப் பணியாற்றியவர். இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் பிள்ளைகள்.[1] தேவன் தனது 58வது அகவையில் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[1]

எழுத்துலகில்

தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.[2] ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை வைத்து கேட்டதும், நடந்ததும் என்ற புதினத்தை எழுதினார்.[1] தமிழகத்தின் சுதர்சன் வெளியீட்டாளர்கள் இவரின் வாடிய மலர்கள் என்ற புதின நூலை வெளியிட்டார்கள்.[1] காந்தியக் கதைகள்" என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன.[2] யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.[3] அக்காலத்தில் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் தேவனிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.[2] டிரசர் ஐலண்டு என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை "மணிபல்லவம்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் உயர்தர வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது.[2][3]

மொழிபெயர்ப்பாளர்

ஆங்கிலப் பேச்சாளர்களின் உரைகளை சமகாலத்தில் தமிழில் மொழிபெயர்ப்பதில் வல்லவராக இருந்தார் தேவன். ஜெயபிரகாஷ் நாராயண் யாழ்ப்பாணம் வந்தபோது அவரது பேச்சை தமிழில் மொழிபெயர்த்துப் பாராட்டைப் பெற்றார்.[1] பிரதமர் டட்லி சேனநாயக்காவின் யாழ்ப்பாணப் பயணங்களில் அவரின் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.[1]

எழுதிய நாடகங்கள்

  • தென்னவன் பிரமராயன்
  • விதி
  • இரு சகோதரர்கள்
  • பத்தினியா பாவையா
  • வீரபத்தினி\
  • நளதமயந்தி

புதினங்கள்

  • வாடிய மலர்கள்,
  • மணிபல்லவம்,
  • கேட்டதும் நடந்ததும் (1956, 1965)
  • அவன் சுற்றவாளி (குறும் புதினம், 1968)

சிறுகதைத் தொகுதிகள்

  • தேவன் – யாழ்ப்பாணம் சிறுகதைகள்

கட்டுரை நூல்கள்

  • வானவெளியில் (அறிவியல் கட்டுரைகள், 1958)

மறைவு

இ. மகாதேவா 1982 திசம்பர் 8 புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் தனது 58-வது அகவையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/w/index.php?title=இ._மகாதேவா&oldid=269301" இலிருந்து மீள்விக்கப்பட்டது