கே. பி. ஹரன்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 23:24, 12 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்

கே. பி. ஹரன் (அக்டோபர் 17, 1906 - அக்டோபர் 14, 1981) தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர். சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர்.

கே. பி. ஹரன்
பிறப்பு(1906-10-17)17 அக்டோபர் 1906
திருவையாறு, தமிழ்நாடு, இந்தியா
இறப்புOctober 14, 1981(1981-10-14) (aged 74)
மயிலாப்பூர், தமிழ்நாடு
அறியப்படுவதுபத்திரிகையாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23 ஆவது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு பட்டறிவு வாய்ந்தவர். முதல் 10 ஆண்டுகள் சென்னையில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும், பின்னர் இலங்கையில் வீரகேசரியில் (1939-1959) 20 ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகவும், ஈழநாட்டில் (1959-1979) 20 ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகவும் எனத் தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா, மருத்துவர் சண்முகரத்தினம் ஆகியோரால் தொடங்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது முதன்மை ஆசிரியர் இவரேயாவார்.

வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் அன்றாடம் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.

ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.

இறுதிக் காலம்

1979 இல் சென்னை திரும்பிய இவர் தனது இறுதிக் காலத்தை மயிலாப்பூரில் கழித்தார். இவர் 1981 இல் தனது 75 ஆவது வயதில் காலமானார்.

பணியாற்றிய பத்திரிகைகள்

  • தமிழ்நாடு
  • ஸ்வராஜ்யா
  • தாருல் இஸ்லாம்
  • ஹனுமான்
  • ஹிந்துஸ்தான்
  • வீரகேசரி (பிரதம ஆசிரியர், 1939-1959)
  • ஈழநாடு (பிரதம ஆசிரியர் 1959-1979)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._பி._ஹரன்&oldid=339640" இலிருந்து மீள்விக்கப்பட்டது