ரணதீரன்
ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவார். அரிகேசரியின் மகனான இவர் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினார். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறார்.. ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றார்.[1].
ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும்
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான்[1]. இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
சாளுக்கிய வெற்றி
சாளுக்கியப் பதிவுகளின்படி , முதலாம் விக்ரமாதித்தன் தெற்கு நோக்கி முன்னேறியதாகத் தெரிகிறது. கி.பி. 674, ஏப்ரல் 25 அன்று, அவர் காவேரி ஆற்றின் தென்கரையில் உள்ள உரகபுரத்தில் ( உறையூர் ) முகாமிட்டிருந்தார். அங்கு, முதலாம் பரமேஸ்வரவர்மன் மற்றும் பாண்டிய மன்னன் கொச்சடையன் ஆகியோரால் அவர் எதிர்க்கப்பட்டார். திருச்சிராப்பள்ளி அருகே பெருவழநல்லூரில் ஒரு போர் நடைபெற்றது. மேலும், கேந்தூர் செப்பேடுகள் முதலாம் விக்ரமாதித்தன் பாண்டியர்களுடன் போரிட்டதாகக் கூறுகின்றன. பெருவழநல்லூரில் வெற்றி பெற்ற மூன்று கூட்டாளிகளில் பாண்டிய மன்னனும் ஒருவன் என்றும் நாம் கருதுகிறோம் . இந்தப் போரில் சாளுக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டதாக பல்லவ மற்றும் பாண்டிய பதிவுகள் சமமாக கூறுகின்றன. வேல்விகுடி செப்புத் தகடுகள் கர்நாடர்களை (அதாவது, சாளுக்கியர்கள் ) ரணதீரன் வென்றதைக் குறிப்பிடுகின்றன. மேலும் அவர் (மதுரகருணாடகன்) என்ற பட்டத்தையும் கொண்டிருந்தார். பெருவல்லநல்லூர் போரில் முதலாம் விக்ரமாதித்யன் தலைமையிலான சாளுக்கியப் படைகளைத் தோற்கடித்தார் . என். சுப்பிரமணியத்தின் கூற்றுப்படி, 'ரணதீரன்' என்ற பட்டம், 'ரணநரசிகன்' என்றும் அழைக்கப்படும் முதலாம் விக்ரமாதித்யனை வென்ற பிறகு சூட்டப்பட்டதாக விளக்கப்படலாம். சாளுக்கிய படைகளுக்கு விக்ரமாதித்யனின் மகன் வினையாதிதன் மற்றும் பேரன் விஜயாதித்தன் ஆகியோர் தலைமைதாங்கினர். பல்லவர்களின் படைகள் சாளுக்கிய நிலத்தை ஆக்கிரமித்தன. சாளுக்கியர் ஆண்டுதோரும் பல்லவருக்கு கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.[2][3]
ரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார்
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).
ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "4.2.4 கோச்சடையன் ரணதீரனும், அவரது மகனும் (கி.பி. 670-765)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். Retrieved 18 சூலை 2015.
- ↑ G Jouveau Dubreuil (1917). The Pallavas. Universal Digital Library.
- ↑ Subramaniam, N. (1962). History Of Tamilnad.