ஆசை இராசையா
ஓவியர் ஆசை இராசையா (ஆகத்து 16, 1946 - ஆகத்து 29, 2020) ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் விளங்கியவர். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
ஆசை, செல்லம்மா ஆகியோருக்கு அச்சுவேலியில் பிறந்தவர் இராசையா. அச்சுவேலி சரசுவதி வித்தியாசாலை, அச்சுவேலி மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர்.[2] கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் ஓவியக் கல்வியைக் கற்றுக் கொண்டார். ஓவியக் கல்லூரியில் கற்கும்போதே பல ஓவியக் கண்காட்சிகளில்லும் ஓவியப் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார்.[2] 1968-இல் கொழும்பு கோல்ட் இசுடோர்சு நிறுவனம் நடத்திய ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் முதல் பரிசைப் பெற்றுக் கொண்டது. பரிசு பெற்ற ஓவியம் அந்நிறுவனத்தின் 1969 நாட்காட்டியிலும் இடம்பெற்றது.[2] 1975 முதல் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் பணியாற்றி வந்தார். எட்டு முத்திரைகளுக்கு இவர் ஓவியம் வரைந்துள்ளார்.[2] பின்னர் இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
ஓவியங்கள்
இவரது படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இவர் வரைந்த முத்திரை ஓவியங்கள்
- சேர். பொன். இராமநாதன் (மெய்யுரு)
- சேர். பொன். அருணாசலம் (மெய்யுரு)
- சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி (மெய்யுரு)
- சேர்.ஜோன் கொத்தலாவல (மெய்யுரு)
- ஜோர்ஜ் ஈ.டி. சில்வா (மெய்யுரு)
- ஈ.பி. மல்லசேகரா (மெய்யுரு)
- தவலம் என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம்
- இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம்
விருதுகள்
- கலைஞானச் சுடர் விருது (2009, நல்லூர் பிரதேச செயலகம் வழங்கியது),
- வடமாகாண ஆளுநர் விருது (2009)
- கலாபூஷணம் விருது (2010)
- கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012)
- ஞானம் சஞ்சிகை விருது (2012)
- ஓவியர் கிக்கோ தமிழியல் விருது (2013, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கியது) [3]
- கலைஞானபூரணன் விருது (2014, திருமறைக் கலாமன்றம் வழங்கியது)
- அச்சூர்க்குரிசில் விருது (2014, அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றம் வழங்கியது) [4]
மேற்கோள்கள்
- ↑ "Power of a painter and his paintings" (in English). sundaytimes.lk. pp. 14 th Paragraph. http://www.sundaytimes.lk/101010/Magazine/sundaytimesmagazine_01.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 இயற்கையசி சிறைபிடித்த இராசையா, சிரித்திரன், பக். 21, நவம்பர் 1986
- ↑ "மட்டக்களப்பு எழுத்தாளர் மையத்தின் தமிழியல் விருது முடிவுகள்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-04-04.
- ↑ "கிராமிய கலை பண்பாட்டுப் பெருவிழா" (in Tamil). Tamilmirror.lk. pp. இரண்டாவது பத்தி. http://www.tamilmirror.lk/115222.
வெளி இணைப்புகள்
- ஓவியர் இராசையா பரணிடப்பட்டது 2015-04-18 at the வந்தவழி இயந்திரம்
- ஓவியக் கலைஞர் ஆசை இராசையா பரணிடப்பட்டது 2014-12-27 at the வந்தவழி இயந்திரம்
- Asai Rasiah: Power of a painter and his paintings By Marisa de Silva