நாட்டிய தாரா
| நாட்டிய தாரா | |
|---|---|
| இயக்கம் | பி. புல்லையா |
| தயாரிப்பு | கண்டசாலா கிருஷ்ணமூர்த்தி |
| கதை | கண்டசாலா பலராமையா |
| திரைக்கதை | தஞ்சை ராமையா தாஸ் |
| இசை | ஜி. ராமநாதன் அஸ்வத்தாமா |
| நடிப்பு | என். டி. ராமா ராவ் அஞ்சலிதேவி தேவிகா மற்றும் பலர் |
| ஒளிப்பதிவு | பி. எல் ராய் |
| கலையகம் | பிரதிபா ஸ்டூடியோஸ் |
| வெளியீடு | 1955 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நாட்டிய தாரா 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் என். டி. ராமா ராவ், அஞ்சலிதேவி, தேவிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 1954 ஆம் ஆண்டு ரெசுக்கா என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படமே மொழிமாற்றம் செய்யப்பட்டு 1955 ஆம் ஆண்டு நாட்டிய தாரா என்ற பெயரில் வெளியானது. இதுவே தேவிகா நடித்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அவரின் பெயர் பிரமீளா என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் தேவிகா எனப் பெயர் மாற்றம் பெற்றார்.[1][2]
கதைச் சுருக்கம்
ஒரு நாட்டின் அமைச்சர் தன் மகளை அரச குமாரனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறார். ஆனால் அரசன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் அரசனைச் சிறையிலடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கையிலெடுக்கிறார். அரசனுக்கு விசுவாசமான வீரண்ணா என்ற ஒரு வேலைக்காரன் இளவரசனை அமைச்சரிடமிருந்து காப்பாற்ற, இளவரசனைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறான். காட்டுத் தலைவனிடம் இளவரசன் கன்னையா என்ற பெயரில் வளர்ந்து வருகிறான். வீரண்ணா அமைச்சரிடம் பிடிபட்டுவிடுகிறான். காட்டில் வளரும் கன்னையாவும், வீரண்ணாவின் மகள் நானாவும் திருடர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சமயம் லலிதாதேவி என்ற ஒரு இளவரசியின் ஆபரணம் ஒன்றை நானா திருடிவிட்டாள். ஆனால் அந்த ஆபரணத்தை கன்னையா லலிதாதேவியிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறான். லலிதாதேவி கன்னையாவைக் காதலிக்கிறாள். கன்னையாவும் அவளை விரும்புகிறான். அதே சமயம் நானாவும் கன்னையாவை விரும்புகிறாள். இதற்கிடையில் சிறையில் அடைபட்டிருந்த அரசன் தப்பி காட்டுக்கு வருகிறான். நானா வீட்டில் தங்குகிறான். கன்னையாவுக்குத் தான் யார் என்ற உண்மை தெரியவருகிறது. அரசை மீண்டும் கைப்பற்ற அவன் புறப்பட்டுச் செல்கிறான். அவன் வெற்றி பெற்றானா? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? மற்றவர்களுக்கு என்ன நடந்தது? என்பதே மீதிக் கதையாகும்.
நடிகர்கள்
- என். டி. ராமா ராவ் – கன்னையா
- அஞ்சலிதேவி – நானா
- பிரமீளா (தேவிகா) – லலிதா தேவி
- முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி - அரசன்
- நாகபூஷணம் - வீரண்ணா
- சதாசிவ ராவ் - அமைச்சர்
- ஜோகா ராவ்
- ஒய். வி. ராஜு
- காகிநாடா ராஜரத்தினம்
- கண்டசாலா அம்மாலு
- லட்சுமணையா சௌத்ரி
- சுப்பிரமணிய சௌத்ரி
- லிங்கம் சுப்பா ராவ்
- காஞ்சி நரசிம்மன்
- வெங்கிடப்பையா
- சைகால் நாயுடு
- கிருஷ்ணையா
- ராமதேவி
- பி. கீதா
- சாவித்திரி
- ராகவகுமாரி
- அருணா
- எல்லம்மா
- சரோஜினி
- கே. சீதா
தயாரிப்பு விபரம்
டோனி கர்டிஸ் (Tony Curtis) நடித்த ஆங்கிலப் படமான The Prince who was a thief என்ற திரைப்படத்தைப் பார்த்த டி. வி. சுந்தர சிவராம சாஸ்திரி (பிரதிபா சாஸ்திரி) அது போன்ற ஒரு திரைப்படத்தைத் தெலுங்கில் தயாரிக்க முற்பட்டார். இந்திய மக்களுக்கு ஏற்றவாறு கதையை கண்டசால பலராமையா உருவாக்கிக் கொடுத்தார். தெலுங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற இப்படத்தைப் பின்னர் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.
பாடல்கள்
திரைப்படத்துக்கு அஸ்வத்தாமா, ஜி. ராமநாதன் இருவரும் இசையமைத்தனர். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.
| வரிசை எண் |
பாடல் | பாடியவர்/கள் | கால அளவு(m:ss) |
|---|---|---|---|
| 1 | பாடிப் பணிவோமே | ஜி. ராமநாதன் | 03:17 |
| 2 | மாடப்புறா பாடுதம்மா | கண்டசாலா | 03:12 |
| 3 | துள்ளித் துள்ளி எங்கே போறாய் தாரா | கண்டசாலா | 02:33 |