முதலாம் அபினிப் போர்

தமிழர்விக்கியிலிருந்து
(முதலாம் அபின் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
முதலாம் அபின் போர்
படிமம்:Destroying Chinese war junks, by E. Duncan (1843).jpg
The HEIC Nemesis destroying Chinese war junks in the Second Battle of Chuenpee, 7 January 1841
நாள் 1839–1842
இடம் சீனா, குவாங்தொவ் மாவட்டம்
பிரித்தானியா வெற்றியீட்டியது
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஹொங்கொங் தீவு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் படிமம்:Flag of China (1862–1889).svg சீனக் குவிங் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் சார்ள்ஸ் எலியட்
ஐக்கிய இராச்சியம் அண்டனி பிளஸ்லேண்ட்
படிமம்:Flag of China (1862–1889).svg டாவோகுவாங் பேரரசு
படிமம்:Flag of China (1862–1889).svg லின் சீசு
Casualties source:[1]

முதலாம் அபின் போர் (First Opium War) என்பது அபின் எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையை சீனாவிற்குள் பலவந்தமாகத் திறப்பதற்கு பிரித்தானியா சீனாவிற்கு எதிராகத் தொடுத்தப் போராகும். இப்போரின் பின்னரே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவை கைப்பற்றிக்கொண்டது. இப்போரை முதலாம் ஆங்கிலோ- சீனப் போர் (First Anglo-Chinese War) என்றும் அழைப்பர். இப்போரின் போது தென்சீனாவின் குவாங்தோவ் மாகாணத்தின் கெண்டன் துறைமுகம் மற்றும் அதனை அண்டியப் பகுதிகள் பிரித்தானியப் படைகளால் அழித்தொழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவில் நிலைக்கொண்டன. அதன் பின்னர் நாஞ்சிங் உடன்படிக்கை எனும் உடன்படிக்கையின் படி சீனாவிடம் இருந்து ஹொங்கொங்கை பலவந்தமாக ஒப்புதல் மூலம் பிரித்தானியா பெற்று, பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிவித்துக் கொண்டது.

முதலாம் அபின் போர் வரலாறு

படிமம்:Opium imports into China 1650-1880 EN.svg
சீனத்தில் அபினி இறக்குமதி

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிரித்தானிய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மாகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தின் ஊடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. உலகிற்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்களாவர். சீனாவிடம் இருந்து தேயிலை கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வது பிரித்தானியாவின் முதன்மை வணிகங்களில் ஒன்றாக இருந்தது. குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் தேயிலைக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்துவந்த பிரித்தானியா, அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருட்களை சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக இந்தியாவில், வங்காளப் பகுதிகளில் அபின் போதைப்பொருள் உற்பத்தியைப் பெருக்கி அவற்றை சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் போதைப்பொருள் வணிகத்தில் பிரித்தானியா அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. அதேவேளை சீனாவில் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின. இவ்வாறான அவலங்கள் குறித்தோ, அழிவுகள் குறித்தோ பிரித்தானியா எந்த அக்கறையும் கொள்ளவில்லை. அதன் நோக்கம் எப்படியாயினும் வெள்ளிக்காசுகளை குவிப்பதாகவே இருந்தது. அப்போது சீனாவில் குயிங் பேரரசு ஆட்சியில் இருந்தது. சீனாவுக்குள் நடைபெற்று வரும் இந்த சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைசெய்தது. இருப்பினும் பிரித்தானியாவால் தொடர்ந்து நடைபெற்று வந்த போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

குவாங்தோவ் சிறப்பு ஆளுநர்

படிமம்:Commissioner Lin Zexu.jpg
ஆளுனர் இலின் சீசு

அப்போது லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின், குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (Special Commissioner of Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைபெற்றுவந்த போதைப்பொருள் வணிகத்தை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் அபின் புகைத்தலைத் தடை செய்திருந்தது. பிரித்தானியா தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடைச்செய்துக்கொண்டு, அதனையே சீனாவிற்குள் சட்டவிரோதமாக வினியோகித்து அப்பாவி சீன மக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கு எழுத்து மூலமாக அறிவித்தார்.[2] குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகளை பிறப்பித்தவண்ணமே இருந்தது. ஆனால் இவை எதனையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து அபினி இறக்குமதியை சீனாவுக்குள் சட்டவிரோதமாக தொடர்ந்த வண்ணமே இருந்தது.

லின் சீசுவின் கடும் நடவடிக்கைகள்

குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான லின் சீசு இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியாவின் போதைப்பொருள் கள்ளக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டே போனது. இதனால் லின் சீசுவின் நடவடிக்கைகளும் கடுமையாகியன. குவாங்தொவ் மாகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக்க் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டன. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார்.

இதனை எதிர்த்தும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்கும் பிரித்தானியா, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளைக் கொண்டு சீனாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப் படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்காக நடந்த முதல் போரும் இதுவே ஆகும்.

போரின் முடிவு

போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் வென்றன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டன. அதன் பின் நாஞ்சிங் உடன்படிக்கை எனும் உடன்படிக்கையில், சீனப்பேரரசை பலவந்தமாகப் பணியவைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்பந்தங்களில் ஒன்று ஹொங்கொங் தீவை சீனப்பேரரசு பிரித்தானியாவிற்கு கையளித்தலாகும்.

படிமம்:The Signing of the Treaty of Nanking.jpg
நாங்கிக் உடன்படிக்கையில் கையொப்பம் இடுவதைக் காட்டும் நெய்யோவியம்.

மேற்கோள்கள்

  1. Martin, Robert Montgomery (1847). China: Political, Commercial, and Social; In an Official Report to Her Majesty's Government. Volume 2. J. Madden. p. 80–81.
  2. http://www.serendipity.li/wod/hongkong.html

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=முதலாம்_அபினிப்_போர்&oldid=470821" இலிருந்து மீள்விக்கப்பட்டது