1 தெசலோனிக்கர் (நூல்)
1 தெசலோனிக்கர் அல்லது தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] to the Thessalonians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதின்மூன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் எட்டாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Thessalonikeis A (Επιστολή Προς Θεσσαλονικείς Α) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Thessalonicenses எனவும் உள்ளது [1]. தூய பவுல் [2] இம்மடலைக் கி.பி. 51இல் எழுதினார் [3].
பவுல் எழுதிய முதல் மடல்
புனித பவுல் எழுதியவற்றுள் இதுவே முதலாவது திருமுகம். அவர் இதனைக் கி.பி. 51ஆம் ஆண்டில் எழுதினார். தொடக்ககால மடலாக இருப்பதால் இதில் இறையியல் வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை. இருப்பினும், உயிர்பெற்றெழுதல், ஆண்டவரின் இறுதி வருகை ஆகியவை பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை.
எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்
மாசிதோனியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம் தெசலோனிக்கா. அங்கு யூதர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்கள். பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது தெசலோனிக்கா வந்தார்; அங்கு எதிர்ப்பு இருந்ததால் பெரேயா வழி ஏதென்சு சென்றார். அங்கிருந்தபோது தெசலோனிக்கர் பற்றிய நினைவே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது.
தாமே அங்குச் செல்ல முடியாத நிலையில் பவுல் தமக்குப் பதில் திமொத்தேயுவை அனுப்பினார். திமொத்தேயு தெசலோனிக்கா சென்று திரும்பி வந்தபோது நல்ல செய்தி கொண்டு வந்தார். அதாவது அங்குள்ள சீடர்கள் இன்னல்களுக்கிடையே தளரா ஊக்கத்துடன் கிறிஸ்தவராகத் தொடர்ந்து நிலைத்திருக்கின்றனர் என்பதை அவர் பவுலிடம் தெரிவித்தார். அத்துடன், இறந்துபோனவர்கள் குறித்து அவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.
நல்ல செய்தி அறிந்து மகிழ்ந்த பவுல் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் தெசலோனிக்கரின் தவறான கண்ணோட்டங்களைக் களையவும் விரும்பிக் கொரிந்திலிருந்து இத்திருமுகத்தை எழுதினார்.
மடலின் உள்ளடக்கம்
இத்திருமுகத்தில் பவுல் தெசலோனிக்க மக்களுடன் கொண்டிருந்த உறவு, அவர்கள்மேல் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்; அங்குள்ள கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்; அவர்கள் கிறிஸ்துவிடம் கொண்டிருந்த அன்புக்காகவும் நம்பிக்கைக்காகவும் நன்றி கூறுகிறார்; அவர்களுடன் இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்வை நினைவூட்டுகிறார்; கிறிஸ்துவின் வருகை குறித்த ஐயப்பாட்டிற்கு விடையளிக்கிறார்; "கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள், கிறிஸ்து வரும்போது நிலைவாழ்வில் பங்குபெறுவார்களா? எப்போது கிறிஸ்து வருவார்?" போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில் கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அமைதியாக உழைக்கப் பணிக்கிறார்.
கிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார்.
வார்ப்புரு:பவுல் எழுதிய திருமுகங்கள்
ஒரு பகுதி
1 தெசலோனிக்கர் 5:14-28
அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே:
சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்;
மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்;
வலுவற்றோர்க்கு உதவுங்கள்;
எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.
இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.
அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.
அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது
உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக!
உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
தூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் வாழ்த்துங்கள்.
அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று
ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!
உட்பிரிவுகள்
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை
(வாழ்த்தும், தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்) |
1:1-10 | 382 |
2. தெசலோனிக்காவில் பவுல் ஆற்றிய பணி | 2:1-16 | 382 - 383 |
3. திருமுகம் எழுதப்பட்ட சூழ்நிலை | 2:17 - 3:13 | 383 - 384 |
4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை | 4:1-12 | 384 - 385 |
5. ஆண்டவரின் வருகை | 4:13 - 5:11 | 385 - 386 |
6. பொது அறிவுரைகள் | 5:12-22 | 386 |
7. முடிவுரை | 5:23-28 | 386 |