கணிகர்
Jump to navigation
Jump to search
கணிகர், மகாபாரதத்தில் பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனின் அரச நீதியை கற்றறிந்த புத்திசாலி மற்றும் தந்திரமான அமைச்சர் ஆவார். இவரது அரச நீதியை கணிகர் நீதி என்பர்.
பின்னணி
மகாபாரதத்தின் ஆதி பர்வத்தின், சம்பவ பர்வத்தில் கூறப்பட்டுள்ளவாறு, பாண்டவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் பகுதியை குரு நாட்டிலிருந்து பிரித்துக் கொடுத்த பின், பாண்டவர்கள் செல்வச் செழிப்புடனும், அதிகாரத்துடனும் வாழ்வதை காணச் சகியாத திருதராட்டிரன் அமைச்சர் கணிகரை அழைத்து பாண்டவர்கள் மீது போர் தொடுக்கலாமா என ஆலோசனை கேட்டார். அதற்கு அமைச்சர் கணிகர் கூறிய எதிரிகளை அழிக்கும் நீதி வருமாறு:[1] [2]
- எதிரிகளை மன்னர்கள் தாக்குவதற்கு எப்போதும் தயாராக இருத்தல் வேண்டும் மற்றும் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொண்டே இருத்தல் வேன்டும். தங்கள் குற்றங்கள் அனைத்தையும் கவனமாக மறைத்துக் கொண்டே, எதிரிகளின் குற்றங்களை இடையறாமல் கவனித்தல் வேண்டும்.
- தனது எந்தப் பலவீனத்தையும் எதிரி அறிந்து கொள்ளாத வகையில் அவன் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தான் தனது எதிரியிடம் கண்டுபிடிக்கும் பலவீனத்தைக் கொண்டு, அவனைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். மன்னன் எப்போதும், ஓர் ஆமை தனது உடலை மறைத்துக் கொள்வது போல, தனது செயல்களையும், அதன் முடிவுகளையும், தனது சொந்த பலவீனத்தையும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட செயலைத் தொடங்கி விட்டால், அதை மன்னன் முழுமையாக முடிக்க வேண்டும். ஒரு முள்ளை உடலிலிருந்து முழுமையாக எடுக்காவிட்டால், அது வளர்ந்து சீழ் பிடித்து, புண் உற்பத்தி செய்யும். அது போன்று தீங்கு செய்யும் எதிரியைக் கொல்வது எப்போதும் பாராட்டுக்குரியதே. எதிரி பெரும் பலவானாக இருந்தால், அவனது கெட்ட எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பிறகு, எந்த மன உறுத்தலும் இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டும். எவ்வளவு வெறுப்பூட்டும் வகையில் எதிரி இருந்தாலும், அவனை வசைபாடக் கூடாது.
- பயந்தவனை மிரட்ட வேண்டும்,. வலியவன் முன் பணிந்து, பேராசை கொண்டவர்களுக்கு லஞ்சம் கொடுங்கள். எதிரி உன் மகனாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும் அவனைக் கொல்லுங்கள். இதுவே வெற்றிக்கான அரச பாதை.
- எதிரி பலவீனமாக இருந்தாலும் புறக்கணிக்காதீர்கள். நெருப்பின் தீப்பொறி கூட காற்றின் உதவியுடன் காட்டை எரித்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்